Thursday, November 28, 2013

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம்


வணக்கம்.

மண்னின் குரல் வெளியீடாக இன்று ஒரு விழியப் பதிவு வெளிவருகின்றது.

அருள்மிகு பன்னாரி அம்மன் கோயிலுக்கு இவ்வாண்டு மார்ச் மாதம் சென்றிருந்த போது செய்த பதிவு இது. காட்டிற்குள் இருக்கும் பன்னாரி அம்மன் கோயிலுக்குள் செல்ல இயலாத போதும் சாலையோரத்தில் அமைந்திருக்கும் பன்னாரி அம்மன் கோயிலை மட்டும் தரிசித்து வந்தோம்.

இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகப்பிரசித்தி பெற்றது. 

ஆலயத்தின் வாசல் புறத்தில் உப்பு கொட்டி வைத்திருக்கின்றனர். வேண்டுதலுக்காக வருகின்ற பக்தர்கள் தாங்களும் உப்பு கொட்டி வேண்டுதல் செய்கின்றனர். சற்று தள்ளி ஒரு தனிப்பகுதியில் சிறிய பன்னாரி அம்மன் உருவச் சிலையும் ஊஞ்சலும் இருக்கின்றது. இங்கு பெண்கள் வந்து ஊஞ்சலை ஆட்டி வேண்டுதல் செய்து செல்கின்றனர்.

இந்தப் பதிவினை நான் செய்ய மிக உறுதுனையாக இருந்தவர் திருமதி.பவளசங்கரி. அவர் கணவருக்கும், நம் நண்பர் ஆரூரனுக்கும் இவ்வேளையில் என் நன்றி.


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, November 26, 2013

கோனேரிராஜபுரம் - திருநல்லமுடையார் ஆலயம்


தமிழகத்தின் தனிச் சிறப்புக்களில் தனியிடம் பெறுபவை சோழர்கால ஆலயங்கள். சோழ சாம்ராஜ்ஜியம் பரவி இருந்த சமையத்தில் இன்றைய தமிழ் நாட்டின் எல்லையையும் கடந்து பல இடங்களுக்கு விரிவாக சோழ ஆட்சி பரவிய இடங்களிலெல்லாம் சோழர்கள் கோயிலைக் கட்டி இறை வழிபாட்டை, குறிப்பாக சைவமும் வைணவமும் செழிக்கச் செய்தனர். சோழ ராஜ்ஜியத்தில் தன்னிரகரில்லாத புகழுக்குறிவயர் செம்பியன் மாதேவியார். இவர் கட்டிய கோயில்கள் பல. செங்கற்ற்ளியாக இருந்த பல கோயில்களைப் புணரமைப்பு செய்து கற்றளிகளாக மாற்றிய பெருமை இந்த அம்மையாரைச் சேரும். அந்த வகையில் இன்றைய விழியப் பதிவாக அமைகின்ற கோனேரிராஜபுரம், திருநல்லமுடையார் ஆலயம் செம்பியன் மாதேவியார் கட்டிய ஒரு கோயில் என்பது தனிச் சிறப்பு.

சோழநாட்டின் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரிலிருந்து ஏறக்குறை 12 கிமீ தூரத்தில் இக்கோயில் இருக்கின்றது.  கண்டராதித்த சோழனுக்குப் பின்னர்,  உத்தம சோழர் தொடங்கி ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலம் வரை நெடுநாட்கள் வாழ்ந்தவர் இவர். செம்பியன் மாதேவியார் ஒரு சிறந்த சிவபக்தை. 

சோழ நாட்டில் செம்பியன் மாதேவியார் திருப்பணி செய்த ஆயங்கள் பல. இவர் எழுப்பிய கற்றளி ஆலயங்களுக்கு தனி பாணி இருக்கின்றது என்கின்றார் தமிழக் தொல்லியல் துறை ஆய்வாளர்.டாக்டர்.பத்மாவதி அவர்கள். இந்தக் கோயில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பாதுகாக்கப்படும் ஒரு கோயில் என்பதும் ஒரு சிறப்பு. 

இக்கோயிலிலேயே தன் கணவர் கண்டராதித்த சோழன் திருநல்லமுடையாரை வணக்குகின்ற வடிவில் ஒரு சிற்பத்தை அமைத்து வைத்திருக்கின்றார். சிதைவுகள் ஏதுமின்றி சிற்பங்கள் அழகுற காட்சியளிக்கின்றன.

இந்த ஆலயத்தின் அனைத்து கல்வெட்டுக்களும் படியெடுக்கப்பட்டு தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

ஆலயத்தின் மற்றுமொரு தனிச்சிறப்பு இங்குள்ள சுவர் சித்திரங்கள். பிரமிக்க வைக்கும் கலை அழகு பொருந்திய சிற்பங்கள் இவை.

இப்பதிவு 12 நிமிடம் நீளம் கொண்டது. பதிவின் 3:02 நிமிடம் தொடங்கி இக்கோயில் பற்றியும் செம்பியன் மாதேவி பற்றியும் டாக்டர்.பத்மாவதி அவர்கள் வழங்கும் சிறு விளக்கமும் இடம்பெறுகின்றது. பதிவின் 7ம் நிமிடம் தொடங்கி சுவரோவியங்களைக் காணலாம்.

இதனை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த பொழுதில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்து மிகவும் ஆதரவு நல்கிய திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனம் நிறைந்த நன்றி.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]