Wednesday, February 26, 2014

மண்ணின் குரல்: பெப்ரவரி 2014: மகா சிவராத்திரி - ஈரோடு மஹிமாலீஸ்வரர் கோயில்

வணக்கம்.

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) சிவராத்திரி தினத்தன்று ஈரோடு ஸ்ரீ மஹிமாலீஸ்வரர் சமேத மங்களாம்பிகை திருக்கோயிலில் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் கோயிலில் செய்யப்பட்ட சிறப்பு சிவலிங்க பூஜை இந்தப் பதிவில் இடம் பெறுகின்றது.


பூஜை ஏற்பாட்டில் இடம்பெறும் சிவலிங்கம், பூஜை பொருட்கள் ஆகியவை தயாரானதும் ஆலயத்தில் கருவறையில் இருக்கும் மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. அந்தச் சிறப்பு பூஜையும் இந்தப் பதிவில் பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் இணைந்து ஈரோடு திரு தங்க. விசுவநாதன் தலைமையில் சிவபுராணம் ஓதி சிவலிங்க பூஜை செய்வதைக் காணலாம்.


யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=t8I64GTDiHM


இந்தப் பதிவினை நான் செய்திட உதவிய திருமதி பவள சங்கரிக்கும் அவர் தம் துணைவர் திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கும், அனுமதி வழங்கிய ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும், திரு தங்க விசுவநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின்  நன்றி.


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ஆலவாய் - கடலோடி நரசய்யா - சன் தொலைகாட்சி பேட்டி

Friday, February 14, 2014

மண்ணின் குரல்: பெப்ரவரி 2014:திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.



திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயில் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கும் முந்தைய பழமையான ஒரு கோயில். இக்கோயிலினுள் சென்று கோயிலின் அமைப்பை பார்க்கும் போது நமக்கு மிக முக்கியமாக மூன்று மாறுபட்ட வகையிலான கட்டிட கட்டுமான அமைப்பு அங்கு இருப்பது தெரியும்.

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்தக் கோயிலின் ஆரம்பகால தோற்றம் பற்றிய செய்திகள் அறிய முடியாதவையாக உள்ளன. ஆயினும் கோயிலின் பழமையான வடிவம், சிற்பங்கள் மற்றும் இக்கோயிலில் இருந்த கல்வெட்டுகள் ஆகியவை இக்கோயில் படிப்படியாக விரிவாக்கப்பட்டமையை நன்கு வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.

கும்பகோணத்தில் இந்த ஆலயம் இருந்த பகுதி வரகுண பாண்டியன் காலத்தில் அதாவது 9ம் நூ. பிற்பகுதியில் பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பது தெளிவு. அதனை சாட்சியாகக் கொள்ளும் வகையில் ஆலயத்திற்குள் வரகுண பாண்டியனுக்கு ஒரு சன்னிதி அமைந்திருக்கின்றது.


வரணகுண பாண்டியன் 

சோழர் வரலாற்றில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படுவது திருப்புறம்பயப்பெரும் போர். இப்போரில் சோழர்கள், பாண்டியர்கள் இருவர் அணியிலும் ஏறாளமானோர் இறந்தனர் என்பதும் இதன் இறுதியில் விசயாலயசோழனின் மகன் ஆதித்த சோழனின் படைகள் பாண்டியப் படைகளைத் தோல்வியுறச் செய்து வெற்றி கண்டது என்பதை அறிகிறோம் (பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார்). இந்த போருக்குப் பின்னர் கும்பகோணமும் போரில் வெற்றி கொண்ட சோழ நாட்டின் ஏனைய பகுதிகளும் சோழர்களால் மீட்கப்பட்டன.

அதன் பின்னரும் போர்கள் பல நடந்தாலும் ஆதித்தனுக்குப் பின் வந்த முதலாம் பராந்தகன் தன் ஆட்சியை மேலும் விரிவு படுத்தி பெரிதாக்குகிறார். திருவிடை மருதூர் ஆலயத்தின் மிகப் பெரிய கட்டுமானப் பணி இந்த  முதலாம் பராந்தகன் காலத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும். (மத்திய தொல்லியல் துறை -கல்வெட்டு செய்திகள் தொகுப்பு 19)

அதன் பின்னர் இக்கோயிலில் மேலும் பல புதிய பகுதிகள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சோழ மன்னர்களால் விரிவாக்கப்பட்டிருக்கின்றன. பராந்தக சோழன், சுந்தர சோழன், உத்தம சோழன், ராஜராஜ சோழன் கால கல்வெட்டுக்கள் இக்கோயில் முழுமையும் நிறைந்திருந்தன. ஆனால் அந்தக் கல்வெட்டுக்கள் அனைத்தும் ஆல்ய புணரமைப்பு என்ற பெயரில்  சிதைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிவோமா?

மத்திய தொல்பொருள் துறை இக்கோயிலின் கல்வெட்டுக்களை 1970க்கு முன்பே படியெடுத்து பதிப்பித்து வைத்தமையால் இன்று நமக்கு இக்கோயிலில் என்னென்ன கல்வெட்டுக்கள் இருந்தன என்ற சான்றுகள் கிடைக்கின்றன. இவையே சோழ மன்னர்களின் செய்திகளைத் தாங்கிய முறையான ஆவணங்களாக இன்று நமக்கு கிடைக்கின்றன. 1970க்குப் பின்னர் ஆலய நிர்வாகம் செய்த புணரமைப்பு பணி ஆலயத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை விளைவித்திருக்கின்றது.

கல்வெட்டுக்கள் புணரமைப்பின் போது அழிக்கப்பட்டமை போலவே கோயிலைக் கட்டியபோது வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட பகுதிகள் புணரமைப்பு என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையும் இன்றைய நிலையில் காண்கின்றோம். வானலிங்கங்கள் என்ற வகையில் ஆலயத்தின் வேறிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கங்கள் எல்லாம் பெயர்த்தெடுக்கப்பட்டு ஒரு பகுதியில் இரண்டு வரிசையாக நட்சத்திரங்களின் பெயர் கொடுக்கப்பட்டு ராசி நட்சத்திரங்களுக்கான லிங்கங்களாக இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆகம முறைப்படி விநாயகர் இருக்க வேண்டிய இடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு வேரிடத்திலும், துர்க்கை பெயர்க்கப்பட்டு வேறிடத்திலும் என வைக்கப்பட்டிருப்பது நமக்கு இப்படியும் கூட கவனக் குறைவுடன் புணரமைப்பு பணிகளைச் செய்கிறார்களா என திகைக்க வைக்கின்றது.  இது இன்று நம் முன்னே இத்தகைய புணரமைப்பு பணிகளால் ஏற்படும் சேதங்களையே காட்டுகிறது.

தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 19ல் இக்கோயிலின் அனைத்துக் கல்வெட்டுகள் பற்றிய செய்திகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த அரும்பெருங் காரியத்தை செயத மத்திய தொல்பொருள் ஆய்வு நிருவனத்திற்கு வரலாற்றில் ஆர்வமுள்ளோர் அனைவரும் நன்றி செலுத்தக் கடமை பெற்றுள்ளோம்.

இன்று வெளியிடப்படும் விழியப் பதிவு இரண்டு பகுதிகளைக் கொண்டது. இவை இரண்டையும் தொடர்ச்சியாகக் காணும் போது ஆலயத்தின் பகுதிகளையும், எவ்வகையில் கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களையும் நன்கு அறிந்து கொள்ள முடியும்.



யூடியூபில் இப்பதிவைக் காண:


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Sunday, February 2, 2014

மண்ணின் குரல்: பெப்ரவரி 2014:சோழ நாட்டு கோயில் - குடந்தை கீழ்கோட்டம் நாகேஸ்வரசுவாமி கோயில்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


சோழ பரம்பரையின் மாவீரன் ஆதித்த கரிகாலனின் மரணச் செய்தியும் அதன் பின்னனியில் இருக்கும் உண்மையும் தெளிவு பெறா விஷயங்களாகவே உள்ளன. பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களில் பலருக்கு அருள்மொழிவர்வனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பது போலவே ஆதித்த கரிகாலனின் உருவத்தோற்றத்தையும் காண நிச்சயம் ஆவல் இருக்கும். அந்த ஆவலை பூர்த்தி செய்கின்றது சோழர்கள் கட்டிய கோயில்களில் ஒன்றான குடந்தை கீழ்கோட்டம் (கும்பகோணம்). இளம் தோற்றத்துடன் இந்த இரண்டு அரச குமாரர்களின் உருவச் சிலையும் மேலும் பல அழகிய சிற்பங்களும்  இக்கோயிலில் அமைக்கப்பட்டிருக்கின்றன. தற்சமயம் இந்தக் கோயில் நாகேஸ்வர சுவாமி கோயில் என்ற பெயருடனேயே அழைக்கப்படுகின்றது.

கல்வெட்டுத்துறை ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆய்வு செய்வதற்குப் மிகப் பிடித்தமானதொரு கோயில் இதுவென்றால் அது மிகையில்லை.

முதலாம் பராந்தக சோழன் தொடங்கி, ஆதித்த சோழன், உத்தம சோழன், ஆதித்த கரிகாலன், ராஜராஜ சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்களைத் தாங்கி நிறகும் ஒரு ஆலயம் இது.

கோப்பரகேசரி வர்மன் எனச் சிறப்பு பெயர் கொண்டழைக்கப்பட்ட ஆதித்த கரிகாலனின் பெருமை சொல்லும் கல்வெட்டுக்கள் மிகத் தெளிவாக வாசிக்கும் நிலையில் இன்றளவும் உள்ள கோயில் இது.

கோயில் அமைப்பில் வியக்கவைப்பது கோயில் கட்டுமானமும் சிற்ப வேலைப்படுகளுமே!  ஏனைய கோயில்களை விட மாறுபட்ட முறையில் சோழ குலத்தோரின் அழகிய உருவச் சிலைகள் அற்புதமாக வடிக்கப்பட்ட கோயில் இது.

வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன் என சொல்லப்படும் சோழர்களுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வைச் சித்தரிக்கும் கற்சிற்பமும் இந்தக் கோயிலில் இடம்பெறுகின்றது. பாண்டியனின் தலையை தன் ஒரு கையால் தூக்கிப் பிடித்து மறு கையில் வாளுடன் வரும் காட்சி இது.

இந்தக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் செய்திகள் சோழ மன்னர்கள் கோயிலில் விளக்கேற்ற நிலங்களைக் கொடையாக வழங்கிய செய்திகளையும், சோழ மன்னர்கள் சில பெயர் குறிப்பிடப்படும் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியிருக்கின்றன. எவ்வகை விளக்குகள் ஏற்றப்பட்டன, அதன் தன்மைகள், விளக்கேற்ற தேவையான எண்ணெய் போன்ற தகவல்கள் கல்வெட்டுச் செய்தியில் அடங்கும்.

இக்கோயிலுக்குச் செல்லும் ஒருவர் இங்கு காணக்கிடைக்கும் கல்வெட்டுக்களை முழுமையாக வாசித்து முடித்தால் சோழர்கால அரச நடைமுறைகளைப் பற்றி விரிவாக தகவல்களை அறிந்து கொள்ளலாம். இக்கோயில் இந்திய மத்திய தொல்பொருள் நிலையத்தால் முழுமையாக படியெடுக்கப்பட்டு விட்டது என்பதும் அவை தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன என்பதும் சிறப்பான விஷயம்.

இந்தப் பதிவில் கோயிலின் பகுதிகளைக் காண்பதோடு டாக்டர் பத்மாவதியும், பரந்தாமனும் கல்வெட்டுக்களை வாசித்து பொருள் சொல்வதையும் காணலாம்.

ஏறக்குறைய 21 நிமிட விழியம் இது. தொடர்ச்சியாக விளக்கம் என்றில்லாமல் இடைக்கிடையே  விளக்கங்கள் இடம்பெருகின்றன.. இதனை மாற்றி வெட்டி ஒட்டுவதில் சிரமம் ஏற்பட்டதால் பெருமளவு மாற்றாமல் ஓரளவு மட்டுமே எடிட் செய்து வெளியிடுகின்றேன். பார்த்து கருத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.


யூடியூபில் காண:http://www.youtube.com/watch?v=4m7hTtYTeKQ&feature=youtu.be


பதிவு செய்யப்பட்ட நாள்: 01.03.2013

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]