Wednesday, December 24, 2014

கிறிஸ்மஸ் தின சிறப்பு வெளியீடு - மேல்சித்தாமூர் சமண மடம்

வணக்கம்.

கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.

இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரத்தில் ஒரு விழியப் பதிவு இணைகின்றது.

மேல்சித்தாமூர் எனும் சிற்றூர் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னரான பழமையான சமண பீடம் அமைந்திருக்கும் பகுதி இது.  இந்த மாவட்டத்திற்கு மட்டுமன்றி  தமிழகத்தில் மிக முக்கியமான சமண மடமாகத் திகழ்வது மேல்சித்தாமூர் சமண மடம். இந்த மேல்சித்தாமூர் சமண மடம் ஜின காஞ்சிமடம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது. மடத்தோடு அமைந்திருக்கும் கோயிலில் பார்சுவநாதர் நேமிதார், ஆதிநாதர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில் பின்னர் சோழ மன்னர்களால் மிக விரிவாக்கப்பட்டது.

தற்சமயம் ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் இந்த மடத்தின் தலைமைப் பொறுப்பேற்று மடத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து வருகின்றார்கள். மடத்தைச் சார்ந்து பள்ளிகளும் சில ஜிநாலயங்களும் இருக்கின்றன. கல்விச் சேவைக்கும் ஜிநாலாயங்கள் பாதுகாப்புக்கும் இந்த மடம் சிறந்த தொண்டாற்றி வருகின்றது.

2014 ஜூன் மாதம் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக இம்மடத்தின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் விரிவான ஒரு பேட்டியினை அளித்தார்கள்.  அப்பேட்டியின் விழியப் பதிவே இன்றைய சிறப்பு வெளியீடாக மலர்கின்றது.

மடத்தின் வரலாறு, தீர்த்தங்கரர்கள், காவி உடையின் பொருள், தமிழுக்கு சமணம் ஆற்றிய தொண்டு என மிக விரிவாக தெள்ளிய தமிழில் பேசுகின்றார் மடத்தின் தலைவர்.

சமணம் என்பது ஒரு சமயம் அல்ல.. அது வாழ்வியல் நெறி எனக் குறிப்பிட்டு மத நல்லிணக்கத்திற்கு இந்த ஜினகாஞ்சி மடம் உதாரணமாகத் திகழ்வதையும் இப்பேட்டியில் குறிப்பிடுகின்றார்.


யூடியூப் பதிவாக:https://www.youtube.com/watch?v=f7ZA_eW_DZ8&feature=youtu.be

இப்பேட்டி ஏறக்குறைய 1 மணி நேரப் பதிவு. இதனை நான் கடந்த ஜூன் மாதம் தமிழகம் சென்றிருந்த வேளையில் மேல்சித்தாமூருக்கு மேற்கொண்ட பயணத்தில் பதிவாக்கினேன்.

என்னுடம் உடன் வந்து பல்வேறு வகையில் உதவிகள் புரிந்த ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, டாக்டர்.பத்மாவதி ஆகியோருக்கும், இப்பதிவின்பை நான் செய்ய ஒத்துழைப்பு நல்கிய மேல்சித்தாமூர் சமண மடத்தின் நிர்வாகத்திற்கும் மடாதிபதி ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடத்தின் வலைப்பக்கம் http://jinakanchi.com/

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

0 comments: