Saturday, July 29, 2017

பெருமுக்கல் கல்வெட்டுக்களும் பெருங்கற்கால குறியீடுகளும்

வணக்கம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் மலைப்பாங்கான பகுதி ஒன்றுள்ளது. பெருமுக்கல் என்பது இப்பகுதியின் பெயர். குன்றின் மேல் நடந்து செல்ல படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வழியில் செல்லும் போதே ஆங்காங்கே பாறைகளில் சில கல்வெட்டுக்களைக் காணமுடிகின்றது. 


இங்கு அமைந்துள்ள சோழர்காலக் கோயில் முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கோயில் இன்று பெருமளவில் சிதலமடைந்த நிலையில் உள்ளது என்ற போதிலும் அதன் சுவற் கல்வெட்டுக்கள் வாசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன. இக்கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகள் தமிழக மன்னர்களின் வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்வதில்  நமக்குத் துணை புரிகின்றன.  

இம்மலைக் கோயிலிலும் கீழுள்ள கோயிலிலும் உள்ள கல்வெட்டுக்களை வாசித்து அதனைத் தமிழக தொல்லியல் துறை ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. இந்த நூலில் 60 கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக்கள் சோழர், பாண்டியர், காடவராயர், சம்புவரையர், விஜய நகர மன்னர்கள் ஆகியோர் காலத்தில் செதுக்கப்பட்டவை. இவற்றில் மிகப் பழமையானதாக உள்ள கல்வெட்டு உத்தம சோழன் காலத்துக் கல்வெட்டாகும்.  அதோடு  முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டுக்களையும் குறிப்பிடலாம். விக்கிரமசோழ மன்னன் காலத்துக் கல்வெட்டுக்களே அதிகமாகக் கிடைக்கின்றன. 

இம்மன்னனின் காலத்தில் தான் இன்று இங்கு காணப்படும் மலைக்கோயிலான  திருவான்மிகை ஈசுரம் உடையார் கோயில் கற்றளியாகக் கட்டப் பெற்றது . இக்கோயிலைக் கட்டுவதற்கு பொருளுதவி செய்த  காக்குநாயகனின் உருவமும், அவனது கட்டளையை ஏற்றுக் கோயிலைக் கட்டிய பெரியான் திருவனான சிறுத்தொண்டனது உருவமும், கோயில் சைவாசாரியான் திருச்சிற்றம்பலமுடையான் அன்பர்க்கரசு பட்டனது உருவமும் சிற்பங்களாக காணப்படுகின்றன.

பெருமுக்கல் எனும் இவ்வூர் சோழர் காலத்தில் சயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மா நாடான விசையராசேந்திர வள நாட்டுப் பெருமுக்கிலான கங்கை கொண்டநல்லூர் என்று வழங்கப்பட்டது. பின்னர் பெருமுக்கல் கங்கை கொண்ட நல்லூர் என்று வழங்கப்பெற்றது. இது அனேகமாக மாமன்னன் ராஜேந்திர சோழன் காலத்தில் நிகழ்ந்திருக்கலாம்.

இந்தக் கல்வெட்டுக்கள் வழி பல அரிய தகவல்களை அறிய முடிகின்றது. அன்றைய சமுதாயத்தில் நில விற்பனை முறை, நிலத்தை அளக்கும் முறை,  நிலத்தை அளக்கும் அளவு கோல்கள் எத்தனை அடி நீளத்தில் இருந்தன, கோயில் வழிபாட்டு முறை,  வழிபாட்டில் சிறப்பிடம் பெற்றோர்,  வீதி உலாவுக்குச் சென்ற தெய்வங்கள்,  போன்ற செய்திகள் உள்ளன.  ஒருகல்வெட்டில் இராஜராஜ சம்புவராயனுக்குத் தொற்றிய வியாதி  குணமாவதற்காகப் பணிப்பெண் ஒருவர் உயிர்விட்டமைக்காக அவர் குடும்பதாருக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிய செய்தியும் சொல்லப்படுகின்றது. அரச குலப் பெண்ணுக்கும் வைசிய குல ஆணுக்கும் பிறந்தவர்களை உத்க்ருஷ்ட ஆயோகவர் என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. நாட்டில் அறம் குறையக்கூடாது என்பதற்காகக் கோயிலில் அறமிறங்கா நாட்டுச் சந்தி என்ற ஒரு வழிபாடு திருமலைமேல் ஆளுடைய நாயனாருக்கு ஏற்படுத்தியமை பற்றியும் ஒரு கல்வெட்டு சொல்கின்றது.


குன்றின் மேலேறி உச்சியை வந்தடைந்த பின்னர் அங்கிருந்து செங்குத்தாக கீழ்நோக்கிச்செல்ல இருக்கும் பாதையில் சென்றால் குகை ஒன்று இருப்பதைக் காணலாம். இந்தக் குகைப் பகுதியில் உள்ள கீறல்கள் பழங்கற்கால கீறல் குறியீடுகள். இவை கி.மு.4000ல் வழக்கிலிருந்த எகிப்திய ஹீரோக்ளிப்ஸ் எழுத்தின் சமகாலத்தவை என சிலரும், பெருங்கற்காலத்தைச் சார்ந்தவை என சில ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். 

இத்தகைய அறிய கல்வெட்டுக்கள் உள்ள பகுதியில் பாறை உடைப்பு நடந்துள்ளது. பாறைகளின் சில பகுதிகள் செதுக்கப்பட்டு அதன் சீரழிந்து காணப்படுகின்றது.  ஆயினும் சில தன்னார்வலர்களின் முயற்சியால் இந்தப் பாறை உடைப்பு தடை செய்யப்பட்டு தற்சமயம் இது பாதுகாக்கப்படும் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருமுக்கல் மலையில் இருக்கும்  சுனையில்  வறட்சிக் காலத்திலும் நீர் வற்றியதில்லை என்றும்,  கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவிய காலத்தில் கூட இப்பகுதி மக்களின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்து வைத்திருக்கிறது இந்தச் சுனை என்றும் இப்பதிவின் போது தோழர் ராஜேஷும் அவர் நண்பர்  பொறியியலாளர் வேங்கட சுப்பிரமணியன் ஆகியோரும் பெருமுக்கல் மலையைச் சுற்றிக் காட்டி விளக்கினர்.  

இந்தப் பெருமுக்கல் மலைக்காகவும் மலை மீது இருக்கும் கோயிலைக் காப்பாற்றவும்,  இந்த மலை மீது இருக்கும் சிவன் கோயில் சீதா குகையில் உள்ள ஏராளமான தமிழ்க்கல்வெட்டுக்களும் தமிழி,வட்டெழுத்துக்களும் சட்ட விரோதமாகக் கல் உடைப்போரால் அரசு அனுமதியின்றி  சேதப்படுத்தப்பட்ட போது அதனை எதிர்த்துப் போராடியவர்களில் தோழர் ராஜேஷும் ஒருவர்.   பண்டைய  வரலாற்றுச் செய்திகளைக் கல்லிலே தாங்கிய இந்த மலையைக் காப்பாற்ற இவரும் மற்றும் சில தோழர்களும் போராட்டத்தில் இறங்கி அதற்காகச் சிறையும் சென்றனர். அப் போராட்டத்தில்   வெற்றி பெற்று ,நிரந்தரத் தடையுத்தரவு பெற்று, இப்பகுதி தொல்பெருள் துறையின் கட்டுப்பாட்டில் வரச் செய்தததில் பெரும் பங்காற்றியுள்ளனர்.   

இன்று இந்த பெருமுக்கல் பகுதியில் ஆங்காங்கே உடைந்த சிற்பங்களும் கற்பாதங்களும் தென்படுகின்றன. குகைக்குள் உள்ள எழுத்துக்கள் அடையாளம் காணப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டு  வாசிக்கப்பட வேண்டும்.  தமிழகப் புராதனச் சின்னங்களில் குறிப்பிடத்தக்க மிகப் பழமையான வரலாற்றுச் சான்றுகள் உள்ள ஒரு பகுதி பெருமுக்கல். இப்பகுதியில் இதன் சுற்றுவட்டாரப் பகுதியும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவையே.



இப்பதிவினைச் செய்வதில் உதவிகளை வழங்கிய
​ தோழர்கள்​
 
​திரு.திருமதி ராஜேஷ், தோழர் 
வேங்கட
​ ​
சுப்பிரமணியன்
 
 ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, July 22, 2017

திருஆனைக்கா - சிவப்புச்சேலை தாய்தெய்வ வழிபாடு

வணக்கம்


​திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவிலாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.  தேவார திருப்பதிகங்களைப் பாடிய அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரோடு அருணகிரிநாதர், தாயுமானவர்,   ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புடன் விளங்கும் கோயில் இது. இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது என்றும் சைவ சமயத்தைப் பின்பற்றுவோரால் வணங்கப்படுகின்றது.

இன்று முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக அறியப்படும் இக்கோயில் தாய்தெய்வ வழிபாட்டுக் கோயிலாக இருந்த கோயில்களில் ஒன்று என்பதற்கான சில சான்றுகள் இக்கோயிலில் கிடைக்கின்றன. இக்கோயிலில் அமைந்திருக்கும் அம்பிகைப்பற்றிய பழமையான செய்திகள் இன்று நமக்குக் கிடைப்பது அரிதாகிவிட்ட போதிலும் இக்கோயிலில் இன்றும் தொடரும் ஒரு சடங்கு சிவப்புச்சேலை மதிய பூசை. இப்பூசை இக்கோயில்  தாய்தெய்வக் கோயில் என்பதை வலியுறுத்தும் வண்ணம் அமைந்திருக்கின்றது.

இதனை வலியுறுத்தும் கருத்துக்களை தனது தெய்வம் என்பதோர்.. என்ற நூலில் முன் வைக்கின்றார் பேரா.முனைவர்.தொ.பரமசிவன் அவர்கள்.

தமிழ்நாட்டுத் தாய்த்தெய்வம் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் இலக்கியங்களில் இருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன. வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், தலையில் பெரும்பாலும் அக்கினி (தீச்சுவாலை) மகுடம் கொண்டிருத்தல், கழுத்தில் காறையும் பொட்டும் அணிந்திருத்தல், நிமிர்ந்த முகம் ஆகியவை தாய்த் தெய்வத்தின் தனி அடையாளங்களாகும். வழிபாட்டு முறைகளில் பொங்கலும் முளைப்பாரியும் சாமியாட்டமும் இரத்தப் பலியும் தாய்த்தெய்வத்தை அடையாளம் காட்டும் தனிக்கூறுகளாகும்.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு தாய்த்தெய்வம் திருஆனைக்கா அகிலாண்டேசுவரி ஆகும். இக்கோயில் மதிற் சுவர்களில், இக்கோயிலில் தன் தலையைத் தானே அரிந்து (நவகண்டம்) கொடுக்கும் வழக்கம் இருப்பதைக் காட்டும் சிற்பச் சான்றுகள் உள்ளன. (இவ்வகைச் சான்றுகள் தொல்லெச்சங்களாகத் தமிழ்நாட்டில் பல கோயில்களில் காணக்கிடைக்கின்றன) இக்கோயிலில் நண்பகல் ஒரு வேளையில் ஆண் பூசாரி சேலையைத் தன் உடம்பில் சுற்றிக் கொண்டு தான் பெண்ணாக மாறியதாகப் பாவனை செய்து கொண்டு  பூசை செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதன் பொருள் இக்கோயில், ஒரு காலத்தில் நரபலி பெறும் உக்கிரமான தாய்த்தெய்வக் கோயிலாகத் தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான். இக்கோயிலை வைதீகமயப்படுத்தி பிற்காலத்தில் தந்தை தெய்வக் கோயிலாக ஆக்கியுள்ளார்கள். வைதீகமயப்படுத்தும் முறைகளில் ஒன்று ஸ்ரீஸக்கர பிரதிஷ்டை செய்தல் (தெய்வத்தின் அடங்கா சினத்தைக் குறைக்கும் மந்திரங்களைச் செப்புத்தகட்டில் எழுதி தலைவாசலில் பதித்தல்) ஆகும்.  
- தொ.பரமசிவன்



இப்பதிவினைச் செய்வதில் உதவிய பேரா.சூசை, பேரா.முனைவர்.விஜயராணி  ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, July 15, 2017

திருவாலீஸ்வரம் : சிற்பக் கலையும் சோழப்பேரரசும்

வணக்கம்.


பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்து அருள்மொழிவர்மரின் வீரச் செயல்களை வியந்து சோழர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் நம்மில் பலர். பொதுவாகவே ராஜராஜன் என்றால் உடனே நம் மனதில் நினைவுக்கு வருவது அவன் கட்டுவித்த ராஜராஜேச்சுவரம் தான். இதுவே தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும், பேச்சு வழக்கில் தஞ்சை பெருங்கோயில் என்றும் வழங்கப்படுகின்றது. இந்தக் கோயிலை மாமன்னன் ராஜராஜன் கட்டுவதற்கு முன்னர் அவன் கட்டிய கோயில் சோழ நாட்டில் இல்லை. மாறாகப் பாண்டிய நாட்டில் அம்பாசமுத்திரத்திற்கு அருகே பிரமதேசம் என்ற சிற்றூரில் கடனா நதியின் தென்கரையில் அமைந்திருக்கின்றது திருவாலீஸ்வரம். இக்கோயிலின் சிற்பங்கள் அற்புதமான வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. கருங்கல்லினால் எழுப்பப்பட்ட இக்கோயில் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு முன் மாதிரியாக அமைக்கப்பட்ட கோயில் என்பதுடன் இக்கோயிலின் சுற்றுச் சுவர்கள் அனைத்திலும் ஏராளமான கல்வெட்டுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் ராஜராஜன் காலத்து அரசியல் நிகழ்வுகளின் ஆவணங்களாக அமைந்து தன் ஆட்சியில் ராஜராஜன் செயல்படுத்திய நீர்மேலாண்மை, நில மேலாண்மை, வரிவசூலிப்பு, தானங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய தகவல் பெட்டகமாக அமைந்திருக்கின்றது.

ராஜராஜ சோழன் இளவரசராக நெடுங்காலம் பல போர்களில் பங்கெடுத்து அரசாட்சி பற்றிய பயிற்சி பெற்று அரியணையில் ஏறியவன். இரண்டாம் சுந்தர சோழனுக்கும் அவனது பட்டத்தரசியான வானவன் மாதேவிக்கும் பிறந்தவன். சோழர் வரலாற்றில் ராஜராஜன் அரியணையில் ஏறிய நாள் முதல் அடுத்த 100 ஆண்டுகள் என்பவை சோழ மன்னர் பரம்பரையினரின் பொற்காலம் என கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தமது சோழர்கள் எனும் நூலில் குறிப்பிடுகின்றார். ராஜராஜனின் முதலாம் மகன் ராஜேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில், சோழ ராஜ்ஜியத்தை இலங்கை மட்டுமன்றி சுவர்ணபூமியாகிய கடாரத்தையும் கைப்பற்றி சோழர்களின் ராஜ்ஜியத்தை விரிவாக்கினான்.

ராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பெயர் பெற்றவன் என்பது இவனுக்கு அமைந்த தனிச்சிறப்பு. இவனது போர் பற்றிய வெற்றிச் செய்திகளை தெளிவாகக் கூறும் செப்பேடு திருவாலங்காட்டுச் செப்பேடு.

பாண்டிய மன்னர்களும். பல்லவ மன்னர்களும் தாம் பிறருக்கு அளித்த தானங்களைப் பற்றிய ஆவணக்குறிப்புக்களைச் செப்பேடுகளில் பொறித்தனர். அதில் தமது முன்னோர் வரலாற்றினையும் எழுத வைத்தனர். அந்த வகையில் சோழப்பாரம்பரியத்தில், தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து அதனை விளக்கும் மெய்க்கீர்த்திகளைத் தமிழில் செய்திக்கு முன் தொடக்கத்தில் கல்வெட்டுக்களில் பொறிக்கும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியவன் ராஜராஜன். ராஜராஜனின் அதே முறையையே ஏனைய பிற சோழ மன்னர்களும் தமது கல்வெட்டுக்களில் பின்பற்றினர். இந்த மெய்க்கீர்த்திகள் வரலாற்றுச் செய்திகளையும் அக்காலத்தில் அம்மன்னனின் ஆட்சியில் நிகழ்ந்த போர் பற்றிய செய்தியையும் உட்படுத்திய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவையே இன்று இம்மன்னர்களின் காலத்தில் நிகழ்ந்த முக்கிய அரசியல் மற்றும் போர் தொடர்பான செய்திகளை ஆராய்ந்து அறிய உதவுவனவாக உள்ளன.

ராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த படைபெடுப்பு போர் நிகழ்வுகள் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. ஈழத்தைக் கைப்பற்றிய ராஜராஜன் சிவனுக்கு அங்கு ஒரு கற்றளியை அமைத்தான். பொலன்னறுவை நகரில் இன்றும் இக்கோயில் இருக்கின்றது. ராஜராஜனின் அரசியல் நிர்வாகத்திறன் இன்றும் வரலாற்றறிஞர்களால் சிறப்பித்துக் கூறப்படுகின்றது.

நிலவரியை ஏற்படுத்தி, அதற்காக நாடெங்கிலும் நிலங்களை அளந்து , நிலத்திற்கேற்ப வரி அமைத்து நிர்வாகத்தை நடத்தினான். நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை மேற்பார்வைக்காக அமைத்து கிராம சபைகளை அமைத்தான், தனது நிலப்படையையும், கடற்படையையும் வலுவாக்கினான்.

இந்தப்பதிவில்

  • கோயிலில் உள்ள வட்டெழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள்.. 
  • ராஜராஜ பாண்டியமண்டலம் என ராஜராஜன் தான் வெற்றி கொண்ட பகுதிக்குப் பெயர் சூட்டி பாண்டி நாட்டு மக்கள் நன்கறிந்த வட்டெழுத்திலேயே தனது கோயிலின் கல்வெட்டுக்களை அமைந்த விபரங்கள், அதன் காரணம் 
  • அந்தணர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்து அவர்கள் அந்த நிலத்தினை வரிகளுடனோ அல்லது வரிகளே இல்லாமல் அதனை அனுபவிக்கலாம் என்ற வகையில் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் 
  • ஒரே காலகட்டத்தில் இரண்டு எழுத்துருக்கள் மக்கள் புழக்கத்தில் இருந்தமைக்கான காரணம் 
  • வட்டெழுத்து கல்வெட்டுக்களைத் தமிழ் எழுத்தில் படியெடுத்து சிதிலமடைந்த கோயிலின் தகவலை புதுப்பித்து தமிழ் கல்வெட்டுக்களைச் செதுக்கிய செய்தி 
  • வட்டெழுத்தின் தொடர்ச்சியாக மலையாள லிபியின் பரிணாம வளர்ச்சி 
  • சிற்பங்கள் உருவாக்கப்படும் அறிவியல் 
  • சோழவந்தான் என்ற ஊரின் பெயர்க்காரணம் 

..
இப்படிப்பட்ட தகவல்கள் வழங்கப்படுகின்றன.

ஜப்பானில் நடைபெற்ற பனிச்சிற்ப கண்காட்சியில் உலக அளவில் 2ம் இடத்தைப் பிடித்த ஒரே இந்தியர். இலங்கையில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கிடையேயான கண்காட்சியில் தம் கலைத்திறனுக்காக முதல் இடத்தைப் பிடித்தார்..
எழுத்தாளர், கவிஞர், ஓவியர் சிற்பி, பேராசிரியர்..இந்தியா முழுதும் கோயில்கள், கலைக்கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பெருமைக்குரியவராகிய ஓவியர் சந்துரு அவர்களும், தமிழக தொல்லியல் துறையின் கல்வெட்டியல் அறிஞர் டாக்டர். பத்மாவதி அவர்களும், பாண்டிய நாட்டில் ராஜராஜன் அமைத்த இக்கோயிலைப் பற்றிய பல செய்திகளை இப்பதிவில் வழங்குகின்றனர்.



விழியப் பதிவைக் காண:  ​
யூடியூபில் காண:  

இப்பதிவினைச் செய்வதில் உதவிகளை வழங்கிய முன்னாள் நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர். கருணாகரன், சகோதரர் விஜய், நெல்லை மாவட்ட அரசு தாசில்தார், திரு.கௌதம சன்னா  ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, July 8, 2017

சுடுமண் வடிவங்கள்

வணக்கம்.

தமிழர் கலைகளில் ஒன்றான சுடுமண் சிற்பம் பற்றிய விழியப் பதிவு ஒன்று  இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.


சுடுமண் கலைச்சிற்ப அமைப்பு இன்று வழக்கொழிந்த ஒன்றாகி அருகி விட்டது. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட வகையில் கைதேர்ந்த கலைஞர்கள் தான் இந்த வடிவங்களை உருவாக்கியிருக்க வேண்டும். இதே போன்ற சுடுமண் சிற்பங்கள் இன்று தமிழகத்தின் ஓரிரண்டு இடங்களில் மட்டும் தான் காணக்கிடைக்கலாம்.

இன்றைய பதிவில் இடம்பெறும் சுடுமண் சிலைகள் 2 குதிரைகளும் ஒரு யானையும் என்ற வகையில் ஒரு மேடை மேல் நின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பண்ருட்டிக்கு அருகே சேமக்கோட்டை என்ற சிற்றூரில் இந்த சிற்பங்கள் உள்ளன.  ஒரு ஐயனார் கோயிலைச் சார்ந்த நிலையில் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.   ஐயனார் கோயில் சற்று புதுப்பிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. இந்த சிலைகள் இருக்கும் இடத்தைச் சுற்றி புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.

இவை நம் கண் முன்னே சிறிது சிறிதாக அழிந்து வருகின்றன. கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சுடுமண் குதிரைகள் வடிவத்தை நாம் பாதுகாக்க வேண்டாமா?

இந்த அரிய கலைச்சிற்பத்தைப் பாதுகாக்க இப்பகுதியின் தொல்லியல் துறையும் மாநில அரசும் தக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக்கொள்கின்றது.



இப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]