Saturday, March 8, 2014

மண்ணின் குரல்: மார்ச் 2014: திருவெள்ளறை ஸ்வஸ்திகா கிணறு

வணக்கம்.

இன்று ஒரு வித்தியாசமான விழியப் பதிவு தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.


இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதம் செய்யப்பட்டது.

​திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோயில் திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இருப்பது. ​பல்லவ மன்னம் முதலாம் நரசிம்மன் நிர்மாணித்த கோயிலாக இது அறியப்படுகின்றது.

இக்கோயிலின் பின்புற சுவற்றினைக் கடந்து​ புதர் நிறைந்த பாதையில் நாம் நடந்து சென்றோம் என்றால் சற்றே தூரத்தில் தமிழக தொல்லியல் துறையின் பாதுகாப்பில் அமைந்திருக்கும் ஸ்வஸ்திகா வடிவ கிணற்றினை வந்தடைவோம்.

ஸ்வஸ்திகா வடிவில் நான்கு மூலைகளைக் கொண்டதாக இந்தக் கிணறு அமைந்திருக்கின்றது. நான்கு புறங்களிலும் கீழிறங்க படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கத்தில் இருப்பவரை இன்னொரு பக்கத்தில் இருப்பவர் காணமுடியாதவாறு அற்புதமாக் இந்தக் கிணறு அமைக்கப்பட்டிருக்கின்றது.

கிணற்றின் மேல் பரப்பில் சுற்றிலும் கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கின்றன. அதன் மேல் ஆங்காங்கே நந்தி, நாகர் போன்ற சிற்பங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இக்கிணறு கி.பி. 800ம் ஆண்டில் பல்லவ மன்னன் தந்தி வர்மன் ஆட்சிகாலத்தில் கம்பன் அரையன் என்பவரால் உருவாக்கப்பட்ட கிணறு என்று தகவல் குறிப்பு சொல்கின்றது. தந்திவர்மனின் பட்டப்பெயர்களில் ஒன்றான மறிபீடுகுப்பெருங்கிணறு என அறியப்பட்ட விஷயமும் இக்கிணற்றில் சுற்றிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகின்றது.

யூடியூபில் இப்பதிவைக் காண:http://www.youtube.com/watch?v=lLMmVIKrRMI


அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

0 comments: